Thursday, April 23, 2009

மேல் மாகாணசபை தேர்தலில் இடதுசாரி முன்னணிக்கு வாக்களியுங்கள்: எம்.கே.சிவாஜிலிங்கம் வேண்டுகோள்


[ புதன்கிழமை, 22 ஏப்ரல் 2009, 02:06.41 AM GMT +05:30 ]
கொழும்பு உட்பட மேல் மாகாண சபைத் தேர்தலில் மேசைச் சின்னத்தில் போட்டியிடும் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தலைமையிலான இடதுசாரி முன்னணிக்கு (லங்கா சம சமாஜக் கட்சி) வாக்களிப்பதன் மூலம் தமிழ் மக்களிற்கான குரலை கொழும்பில் ஓங்கி ஒலிக்கச்செய்ய முடியும் என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் அழைப்பு விடுத்துள்ளார்.

எதிர்வரும் 25ஆம் நாள் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நேற்று (செவ்வாய்க்கிழமை) கொழும்பில் நடைபெற்ற இடதுசாரி முன்னணியில் பரப்புரைக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் பேச்சு ஒலிபரப்பப்பட்டது.

அச்சுறுத்தல் காரணமாக கொழும்பில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொள்ள முடியாத நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் உரை ஒலி வடிவில் ஒலிபரப்பப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்திள் உரையில் இருந்து...

கொழும்பில் இன்று நடைபெறும் கூட்டத்தில் நான் கலந்துகொள்ள முடியாமல் இருப்பதை நீங்கள் புரிந்துகொள்ள முடியும். நாடு இருக்கக்கூடிய ஆபத்தான போர் சூழ்நிலை காரணமாக என்னால் நேரடியாகக் கலந்துகொள்ள முடியவில்லை. அதற்காக தயவுசெய்து என்னை மன்னிக்க வேண்டும்.

இருந்தாலும், இடதுசாரி முன்னணி தலைமையிலே நவ சமா சமாஜக் கட்சியைச் சேர்ந்த கலாநிதி விக்கிரபாகு கருணாரத்ன தலைமையிலே, தோழர் திருநாவுக்கரசு போன்றவர்கள் தலைமையிலே இயங்கக்கூடிய இடதுசாரி முன்னணியை வெற்றிபெறச் செய்வதன் மூலம்தான் இந்தப் பிரச்சினைக்கு முகம் கொடுக்க முடியும். அவர்கள் மேசைச் சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.

போர் சூழ்நிலையினால் முழு இலங்கையும் அழிவுப் பாதையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றது. இதில் தமிழ் மக்கள் மட்டுமன்றி சிங்களவர்கள், முஸ்லீம்கள், பறங்கியர்கள் என அனைவரும் பிரச்சினையை, உயிராபத்தை எதிர்நோக்கக்கூடிய நிலை இருந்துகொண்டு இருக்கின்றது. எல்லாவற்றுக்கும் மேலாக பொருளாதார நெருக்கடியினால் இந்த தொழிலாளர் வர்க்கம் மிகப்பெரிய நெருக்கடியில் இருந்துகொண்டு இருக்கின்றது.

போரில் ஆயிரக்கணக்கில் மக்கள் கொல்லப்பட்டுக்கொண்டு இருக்கின்றார்கள். சிங்கள மக்கள் மத்தியிலும் படையினர் கொல்லப்படுகின்றனர். இந்த சூழ்நிலையில் அரசாங்கத்தில் இருக்கும் அரசியல்வாதிகள்தான் இலாபமடைந்துகொண்டு இருகின்றனர். இதனைத் தடுப்பதற்கு போர் நிறுத்தம் ஒன்றை உடனடியாகக் கொண்டு வருவது அவசியம்.

தமிழ் மக்களுடைய சுய நிர்ணய உரிமையை மிகத்தெளிவாக அங்கீகரித்துள்ள இடதுசாரி முன்னணியை வெற்றிபெறச் செய்வது அனைவரது கடமை என நாங்கள் கருதுகின்றோம். எனவே மேசைச் சின்னத்தில் போட்டியிடும் இடதுசாரி முன்னணிக்கு நீங்கள் வாக்களிப்பதன் மூலம்தான் போரை நிறுத்தி இழக்கப்பட்ட சனநாயக உரிமைகளை மீண்டும் கட்டியெழுப்பி இரண்டு இனங்களுக்கு இடையே ஒற்றுமையை வளர்க்க முடியும்.

அதேவேளை, இரண்டு தேசங்கள் என்ற அடைப்படையில் இரண்டு இனங்களுக்கு இடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் அதேநேரம், இரண்டு இனங்களும் இணைந்து வாழ முடியாது என்பதை ஏற்று, தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்துள்ள இடதுசாரி முன்னணியை ஆதரிக்க வேண்டியுள்ளது.

நிரந்தரமான அமைதியையும், சமாதானத்தையும் ஏற்படுத்த இடதுசாரி முன்னணியை ஆதரிக்க வேண்டும். அதற்காகக் குரல்கொடுக்கக்கூடிய இந்தத் தலைவர்களை ஆதரித்து வெற்றிபெறச் செய்யுங்கள்.

சிங்கள தேசியக் கட்சிகள் பல போரை ஆதரிக்கின்றனர். அவர்களுடன் இணைந்து போட்டியிடுபவர்களை நீங்கள் தமிழ்களாகப் பார்க்க முற்பட்டால், நாங்கள் அதனையிட்டு கவலையடைய நேரிடும். ஜனாதிபதித் தேர்தல் உட்பட பல நெருக்கடிகள் ஏற்பட்டபோதும் இடதுசாரி முன்னணி தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளவில்லை.

இவ்வாறானவர்களை ஆதரிப்பதன்மூலம்தான் தமிழ் மக்கள் தமது புரட்சிகரமான சிந்தனைகளை வெளிப்படுத்த முடியும். தமிழ் மக்கள் அனைவரும் புதிய சிந்தனையுடன் மேசைச் சின்னத்தில் போட்டியிடும் இடதுசாரி முன்னணிக்கு வாக்களித்து திருப்புமுனையை ஏற்படுத்த வேண்டும் என, நான் மிகவும் அன்புடனும், தோழமையுடனும் கேட்டுக்கொள்ளுகின்றேன்.

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கொழும்பில் இடம்பெற்ற கூட்டத்தில் தொலைபேசி வாயிலாக உரையாற்றியுள்ளார்.

No comments:

Post a Comment